நெஞ்சிற்கினிய நேசர்களே! இக்கட்டுரையை
முதலில் ஸௌராஷ்ட்ர மொழியில்தான்(பயந்து விடாதீர்கள்!—தமிழ் எழுத்தில்தான்) எழுத நினைத்தேன். என்றாலும், இதை ஸௌராஷ்ட்ரல்லாதாரும் — ஏன்? ஒவ்வொரு பாரதபுத்திரனும் அறிய
வேண்டிய கருத்து என்று நான் (தவறாகவோ - சரியாகவோ) கருதிய காரணத்தால் தமிழிலேயே எழுத
முனைந்தேன்.
நாம் சிந்திக்க வேண்டிய செய்திகள் ஏராளமாக
இருந்தாலும் இப்போதைக்கு நான் இங்கு இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் உங்கள் முன்
வைக்க முன்வந்துள்ளேன். அவற்றில்ஒன்று காந்தியடிகளைப் பற்றிய செய்தி. அது,இது;-
1965—1966ஆம் ஆண்டுகளில் என்று நினைவு. நான் ஸௌராஷ்ட்ர உயர் நிலைப்
பள்ளியில் தமிழாசிரியனாகப் பணியாற்றிய சமயமது. அதுபோது ஆறாம் வகுப்பு பாடநூலில்
பிரபல கல்வியாளர் நெ. து. சுந்தரவடிவேல் அவர்கள் எழுதிய
கட்டுரை ஒன்று பாடமாக வந்திருந்த்து. அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு பகுதி என்னை திடுக்கிட வைத்த்து. அது, இது :-
ஒருமுறை காந்தியடிகள் தமிழ்நாட்டில்
ரயில் பயணம்
மேற்கொண்டு இருந்தபோது – சேலம் வழியாகச் செல்கையில்
அங்கே-வயல் ஒன்றில் விவசாயத் தொழிலாளிகள் மேலாடையின்றி இடுப்புத் துணியுடன் பணி
யாற்றுவதைப் பார்த்து—வருந்தி—நாட்டுக்கே உணவு வழங்கும் விவசாயி சரியான ஆடைகூட
வாங்கி அணிய முடியாதிருக்கும் அவலநிலையை எண்ணி, இனி தாமும் அவர்களைப் போல் இடுப்பில்
மட்டும் ஆடை அணிவது என்று முடிவு செய்து,தன் மேலாடையை (சட்டை) கழற்றியதாக்க் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஒட்டிய இன்னொரு செய்தி. காந்தியடிகள் மதுரை மேலமாசி வீதியில்
உள்ள காதிபவனம்-சர்வோதய அங்காடியில்
தங்கி இருக்கும்போது ஏழைகள் மேலாடையின்றி இருக்கும் அவலநிலையைக் கண்டு மனம்
நெகிழ்ந்து,’’ தானும் இனி மேலாடை அணிவதில்லை’’-என முடிவெடுத்து மேலமாசி வீதியில்
உள்ள அக்கட்டிடத்தில்தான் தமது மேலாடையைத் துறந்து இடுப்பு வேஷ்டி மட்டும்
கட்டிக்கொண்டதாக பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
இவை இரண்டில் எது உண்மை?
‘என்னைக் கேட்டால் இரண்டுமே உண்மை அல்ல’ -என்பதே என் கருத்து.
மதுரையில்—காமராஜர் சாலையில்—அலங்கார் தியேட்டர் அருகில் ‘காந்திபொட்டல்’ என்று ஓர் இடம் உள்ளது. அங்கே ஒரு காந்தி சிலையை யும் அமைத்து’கந்தி ஜெயந்தியன்று
(மட்டும்) சிலையைச்
சுத்தப்படுத்தி மாலை அணிவிப்பர்.
இன்று பெரும் கடைத்தெருவாக உள்ள அப்பகுதி
அன்றைய காலகட்டத்தில் கட்டிடங்கள் எதுவும் இன்றி வெட்டவெளியாக (பொட்டலாக) இருந்தது.
காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த சமயம்
அந்தப் பொட்டலில் அவரது சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் நினைவுகூர
வேண்டும்.
அந்தக் காலத்தில் அந்தப் பொட்டலின் அருகே
இருந்த கான்பாளையம், லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் முழுக்க
முழுக்க ஸௌராஷ்ட்ர நெசவாளர்களே வாழ்ந்து வந்தனர் என்பது தெரிதருதேற்றம். அத்துடன் ஸௌராஷ்ட்ரர்கள் அனைவருமே அந்தக் காலகட்டத்தில் காந்தியைக்
கடவுளின் அவதாரமாகவே கருதினர் என்பதையும் நான் மூத்தோர் வாய்மொழி மூலம்
அறிந்துள்ளேன்.
இக்காரணங்களினால் காந்தியடிகளின் அக்கூட்டத்தில் பெருவாரியான ஸௌராஷ்ட்ர
நெசவாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசவந்த காந்தியடிகள் தம்முன்னே அரையாடை (இடுப்பு வேஷ்டி அல்லது துண்டு) யுடன் அமர்ந்திருந்த மக்களைப்
பார்த்து திடுக்கிட்டு அருகில் இருந்தவர் களிடம், ’’இவர்கள் எல்லோரும் யார்? ஏன் சட்டைகூட
அணியாதிருக்கிறார் கள்?’’— என்று கேட்க அவருக்குக் கிடைத்த பதில், ’’இவர்கள் ஸௌராஷ்ட்ர மக்கள். இவர்களது குலத்தொழில் நெசவு.அத்தொழிலின் வருமானத்தில் அவர்களுக்குக்
கிடைக்கும் வாழ்க்கை இவ்வளவுதான்!’’—என்பது.
இதைக் கேட்டு திடுக்கிட்ட காந்தியடிகள்,’’ஊருக்கெல்லாம் ஆடை நெய்து தரும் நெசவாளிக்கு அணிய போதிய ஆடை
கிடைக்காத போது எனக்கெதற்கு மேலாடை!’’—எனக் கூறி அங்கேயே—அந்த மேடையிலேயே தம் சட்டையைக் கழற்றிப்
போட்டதாகவும்—அன்று முதல் காந்தி அரையாடை அணிந்த முழுமனிதராக வாழ்ந்த்தாகவும் வரலாறு
கூறுகிறது. இக்காரணம் பற்றி அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் இன்றளவும் ‘காந்திப்பொட்டல்’ என்று பெயரும் ஏற்பட்டு நீடித்து,நிலைத்து வழங்கி வருகிறது.
ஆம், காந்தியடிகளின் மனமாற்றத்துக்கு முக்கிய காரணம், ‘ஸௌராஷ்ட்ர நெசவாளி’—என்ற வரலாற்று உண்மையை நாம் பதிவு
செய்தாக வேண்டும்.
சரி,இரண்டு செய்திகளில் ஒன்றைச் சொல்லி விட்டேன். அது
காந்தியடிகளுடன் தொடர்பு உடையது என்றால் இரண்டாவது செய்தி கர்மவீரர் காமராஜருடன்
தொடர்பு உடையது.அது என்ன என்பதுதானே உங்கள் கேள்வி.
இதோ அதையும் சொல்லி விடுகிறேன்.
பள்ளிகளில் முதன் முதலில் இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர் கர்மவீரர்
காமராஜர் என்பது நாடெங்கும் ஒலிக்கும் ஓர் உண்மை ஓசை.அதை மெருகேற்றி
மேலும் மேம்படுத்தியவர் புரட்சித் தலைவர் M.G.R. என்பது நாடு உரைக்கும் ஓர் உண்மை ஒலி.
என்றாலும் -----
இந்த மதிய உணவு என்ற மாபெரும் விருட்சத்திற்கான விதை எது என்பதை யாரும்
அறிய விரும்புவதில்லை.நாம் எடுத்துரைக்க முன் வந்தாலும் அந்த நொடி மட்டும் ஏனோ
கேளாக்காதர்களாகி விடுகின்றனர்.
நெசவுத் தொழிலையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்த ஸௌராஷ்ட்ர மக்கள்
கல்வியிலும் மேம்படவேண்டும் என்ற உத்வேகத்தில் – நம் முன்னோர்களின் தியாக
உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து ஜனித்து வந்ததே இன்றைய ஸௌராஷ்ட்ரப் பள்ளிகள்.
என்னதான் நாம் ‘’செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கி நோக்குங்கால் நெய்யும்
தொழிலுக்கு உண்டோ இணை!’’—என்று பெருமை பேசினும் நெசவுத் தொழில் நமக்குத் தந்த சீதனம் வறுமை
ஒன்றே! (‘’வறுமை’’க்கும்’’வளமை’’க்கும் நடுவே ஒரே ஒரு எழுத்துதான் மாறுபடுகிறது – பாருங்கள்)
இதை மனதிற்கொண்ட நம்முன்னோர் அரும்பாடுபட்டு-பெரும் இன்னல்களையும்
எதிர்கொண்டு ஸௌராஷ்ட்ரா பள்ளிகளைத் தொடங்கினர். பள்ளிகளைத் தொடங்கினால் போதுமா?
வீட்டில் அறை வயிறும் கால்வயிறும் உண்டு நெசவுத் தொழிலில் பெற்றோருக்குத் துணை
நிற்கும் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து படிக்க வேண்டாமா?
‘’வயிராற உண்ணாவிட்டால் படிப்பு எப்படி வரும்? பசி அரக்கன் அவ்வளவு பொல்லாதவன் ஆயிற்றே!’’- என்று சிந்தித்த ஸௌராஷ்ட்ர சான்றோர் – அக்காலத்திலேயே—100ஆண்டுகளுக்கு
முன்பே — நம் பள்ளி மாணவர்களுக்கு—வாழையிலை போட்டு வயிராற உணவு உண்ண சுவையான மதிய
உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தனர்.இத்திட்டத்தின் முன்னோடிகளாக கொ.மு.சுப்பய்யர்—சுப்புராயலுஐயர்
ஆகியோரைக் கூறலாம். இவர்கள் ஸௌராஷ்ட்ர ஸபைக்கு நன்கொடையாகக் கொடுத்த இடத்தில்
ஹாஸ்டல்(இது மாணவர்கள் தங்கும் விடுதி அல்ல;உணவு மட்டும் உண்ணும் இடம்) தொடங்கப்
பட்டு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.இதற்கு பல ஸௌராஷ்ட்ர
பெரு மக்கள் ஏராளமாகவும்—தாராளமாகவும் நிதியுதவி அளித்து வந்தனர்; இன்றும்
தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் 1954ஆம் ஆண்டில் நம் பள்ளியின் பொன்விழா கட்டிடத்திற்கு
அடிக்கல் நாட்ட அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு காமராஜர் வருகை தந்தார்.அவர் பொன்விழா
கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் நில்லாமல் நம் பள்ளியின் செயற்பாட்டையும்
கூர்ந்து கவனித்து—குறிப்பாக—மாணவர்களுக்கு ஹாஸ்டலில் வழங்கப்படும் இலவச மதிய
உணவுத்திட்டத்தைக் கண்டு மனமிக மகிழ்ந்து-‘’ஓர் இனம் இதனைச் செயற்படுத்தும் போது—ஓர்
அரசால் ஏன் முடியாது?’’—என்ற கேள்வியைத் தமக்குத் தாமே கேட்டுக்கொண்டவராய்த் தம்முடன்
வந்திருந்த அன்றைய கல்வி இயக்குநர் திரு.நெ.து.சுந்தரவடிவேல் அவர்களிடம்,’இத்திட்டச் செயற்பாட்டைக் கேட்டறிந்து விரிவான அறிக்கை தருமாறு
கூறினார்.
இப்படிப் பிறந்ததுதான் தமிழகப் பள்ளிகளின் மதிய உணவுத்திட்டம்.
அதாவது ‘’அந்த விருட்சத்தின் விதை
ஸௌராஷ்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.’’—என்ற வரலாற்று உண்மையை இங்கு பதிவு
செய்கிறேன்.அம்மட்டோ........!
தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு
வித்தாக இருந்த நம் பள்ளி ‘’தொலைதூர மாணவர்கள் காலை உணவுகூட
உண்ணாமல் பட்டினியாக வருவதை அறிந்து வருந்தி—மனம் நொந்து-வெந்து-வேதனைப்பட்டு
அவர்களின் பசிப்பிணி தீர அமெரிக்க வாழ் ஸௌராஷ்ட்ரர் மற்றும் வள்ளல் பலர்தம் நிதி
உதவியுடன் 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலவச காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத்
தொடங்கி செயற்படுத்தி வருவது எண்ணி எண்ணி வியத்தற்குரியது. ‘’உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’’-என்பர். ஆனால் நம் ஸௌராஷ்ட்ரா
மேல்நிலைப் பள்ளியோ உண்டியும்—கல்வியும் (உயிரும் அறிவும்) ஒருசேரக் கொடுத்து
வருவதை வரலாற்றில் இருந்து ‘மறைக்கவோ...மறுக்கவோ...மறக்கவோ...முடியாது.
இம்மட்டோ!
சொல்ல இன்னும் நிறைய உண்டு! காலம் துணை
செய்தால் என் நெஞ்சக்குமுறல்களை வல்லரி மூலம் கொட்டிக் குவிக்கின்றேன்.
நன்றி!